சேலம் மாவட்டத்தில் மூன்று தலை முறையாக கயிறு திரிக்கும் கொத்தடிமைக் குடும்பம் : அதிர்ச்சித் தகவல்
சேலம் மாவட்டத்தில் மூன்று தலை முறையாக கொத்தடிமைகளாக வாழும் குடும்பம் குறித்த அதிர்ச்சித் தகவல் நமக்கு கிடைக்க நமது நிருபர் அங்குவிரைந்தார். அவர் அளித்த தகவல்கள் விபரமாவது: தாரங்கலத்தை தலைமையிடமாகக் கொண்ட கிராமிய பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் அளித்த தகவலின் பேரில் கே.ஆர்,தோப்பூர் என்ற கிராமத்தை பார்வையிட்டோம். அங்கு நம் மனதை பதற வைக்கும் காட்சிகள் நடந்தேறிக் கொண்டிருந்தது. கடந்த 30 வருடங்களுக்கு முன்னால் கே.ஆர்,தோப்பூருக்கு அருகில் உள்ள கருக்கல்வாடியில் வசித்து வந்த கந்தசாமியும் அவரது மனைவி குழந்தையம்மாளும் வறுமையின் காரணமாக ஒட்டு மொத்தக் குடும்பமும். கே.ஆர்,தோப்பூருக்கு புலம்பெயர்ந்தனர். விவசாய கூலியாக ரத்தினம் என்பவரின் பண்ணையில் வேலை செய்யத் துவங்கினர். தொடர்ந்து வாட்டிய வறுமையின் காரணமாக. அதே முதலாளியிடம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடலாயினர்.முதன் முதலாக வாங்கிய கடன் 5000 ரூபாய்.ஆண்டுகள் உருண்டோடின. ஆண்டுகளோடு கடனும் சேர்ந்து வளரத் துவங்கியது. கந்தசாமியும் தனது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க மீண்டும் கடன் வாங்கினார். தற்போது தனது தந்தை பெற்ற கடனுக்காக கந்தசாமியின் மூத்த மகன் பழனிச்சாமி அவரது தம்பி சுப்பிரமணி மற்றும் கடைசி தம்பி அனைவரும் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்,என்பதை அறிய முடிந்தது. காலை 5 மணிககு துவங்கும் வேலை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கயிறு திரிப்பதற்கான மூலப் பொருட்களை முதலாளி கொடுத்து விடுவார். பெறப்பட்ட நாரினை காலை 5 மணிக்கெலலாம் எழுந்து தண்ணீர் ஊற்றி பதப்படுத்த வேண்டும்.பின்னர் மூவர் மூவராக சேர்ந்து கயிறினை திரிக்கின்றனர். இவ்வாறு வேலை சில நேரங்களில் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.தற்போது,இவர்கள் பெற்றிருக்கும் மொத்தக் கடன் 75,000ரூபாய். மூன்று தலைமுறையாக யாரும் பள்ளிககு செல்லவில்லை.வேறு வேலைக்கு இவர்கள் செல்ல நினைத்தாலும் வாங்கிய கடனை கட்டிவிட்டு செல்லுமாறு முதலாளி நிர்பந்திப்பதால் வேறு எந்த வேலைக்கும் செல்ல இவர்களால் இயலவில்லை. தலைமுறை தலைமுறையாக கயிறு திரிக்கும் தொழிலில் அடிமைகளாக உள்ள இவர்களை அரசு கொத்தடிமையினின்று விடுவிக்குமா?
நமது நிருபர் செய்தி&காணொளி:ஜோ பிரகாஷ்